சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பாராட்டியுள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க அரச தலைவராக நியமிக்கப்பட்டமைக்கான வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய பிரதமர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியானது ஜனநாயகக் கோட்பாடுகளைப் பாதுகாத்தல் மற்றும் ஜனநாயக இணக்கப்பாட்டைக் கோருவது என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் இலங்கைக்கான உண்மையான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இலங்கை மக்களுடன் குறிப்பாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களில் தொடர்ந்தும் பிரித்தானிய இணைந்து பணியாற்றும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான தனது பரிவர்த்தனைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவான மற்றும் சாதகமான முன்னேற்றத்தை அடைய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர், தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தை நினைவுபடுத்திய பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இதன் மூலம் ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களிலும் வரியில்லாப் பயன்பெறும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.