புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கும் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கும் தேவையான அரசியல் உடன்பாடுகளுடன் செயற்படுவதாகவும், அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் 06 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திரு.ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடக்காவிடின், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நாட்டின் கருத்தைக் கேட்டு, ஜனநாயக ரீதியில் செயற்படுவோம் என ஜனாதிபதி தெரிவித்தார். அரசியல் கட்சிகள் என்ற போர்வையில் இந்த விடயங்களை என்றென்றும் ஒத்திவைக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அமெரிக்க தூதரகத்தின் நிர்வாக அதிகாரி சமந்தா பவருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாட்டுச் சந்தைகள் மற்றும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையின் கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தெற்காசியா, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு சந்தைப் பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கைத்தொழில், விவசாயம் மற்றும் ஏனைய துறைகளுக்கான தொழிநுட்பத்தின் நவீனமயப்படுத்தல் முன்னெடுக்கப்படும் எனவும், இதன் மூலம் உள்ளூர் கைத்தொழில்துறையினர் மற்றும் விவசாய சமூகம் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த முடியும் எனவும் திரு.ரணில் விக்கிரமசிங்க சமந்தா பவருக்கு குறிப்பிட்டார்.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை வளமான நாடாக மாற்றும் நோக்கில் 2023 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 25 வருட வேலைத்திட்டத்திற்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் ஆதரவு மிகவும் அவசியமானது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். போட்டிமிக்க ஏற்றுமதி சந்தையில் இலங்கை கவனம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அந்த சந்திப்பில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஸ்காட்லாந்து யார்டும் உதவும் என்று ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை, இலங்கையின் அரசியல் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலும் பொருளாதார நிகழ்ச்சி நிரலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண தனது வர்த்தக சமூகத்தை ஈடுபடுத்துவதை அமெரிக்கா உறுதி செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார சவாலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் சமந்தா பவர் உறுதியளித்துள்ளார்.