பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக 2000 கோடி ரூபா முதலீடு செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் அடுத்தப்படியான விசாரணையினை எதிர்வருகின்ற டிசம்பர் மாதம் 8-ம் திகதிக்கு அழைப்பு விடுத்த நீதிபதி அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சாட்சிகளை நீதிபதி எச்சரித்து உத்தரவிட்டார்.
இவ் வழக்கினுடைய மூன்றாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சுஜானி போகொல்லாகம சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி விடுத்திருந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 20ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பங்களாதேஷ் நாட்டிற்கு விஜயம் செய்ய அவருக்கு அனுமதியும் வழங்கினார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் பயணத்தடை விதிக்கவில்லை என்பதோடு நீதிமன்றத்திற்கு அறிவித்து வெளிநாடு செல்ல எந்தவித தடையும் இல்லை என நீதிபதி மேலும், குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக 200 கோடி ரூபாயை முதலீடு செய்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.