மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் மலேசியா தொழிலாளர் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான இராஜதந்திரக் குழு, இலங்கைத் தொழிலாளர்களுக்கு 10,000 மலேசிய வேலை வாய்ப்புகளைத் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
அங்கு, பத்தாயிரம் பணியிடங்கள், ஒப்பந்த காலம், சம்பளம் போன்ற அனைத்து நிபந்தனைகளும் முடிவு செய்யப்பட தீர்மானிக்கப்படவுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இந்நாட்டில் உள்ள மலேசிய உயர்ஸ்தானிகர் டத்தோ டான் யாங் தாய் ஆகியோர் இன்று (22) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில் கையொப்பமிடுவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி மலேசியா அரசாங்கத்திடம் மனிதவள அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த 10,000 வேலை வாய்ப்புகள் இலங்கைக்கு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியா வேலைவாய்ப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ இருதரப்பு உடன்படிக்கை எட்டப்படுவது இதுவே முதல் தடவையாகும், மேலும் 2018 ஆம் ஆண்டு மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்த போது மலேசியாவுடன் தொழில் பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
“இரு நாடுகளுக்கும் இடையிலான அறுபத்தைந்து வருட இராஜதந்திர உறவுகளின் வரலாற்றில் இது ஒரு தனித்துவமான மைல்கல். ஏனெனில் இதற்கு முன்னர் இந்த வேலை வாய்ப்புகள் மற்ற தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிற்கு மட்டுமே திறந்திருந்தன. எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, மலேசியா அரசாங்கம் எடுத்த இந்த உடனடி நடவடிக்கைக்கு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் என்ற முறையில் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோன்று, இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பிற்காக மலேசிய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாட்டில் பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் மலேசியா மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஒரு நாடாக நாம் அனைவருக்கும் நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க வேண்டும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.