இலங்கையின் வெளிநாட்டுக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமது நாடு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இலங்கையின் கடன் பிரச்சினையை தீர்க்க சீனா, இந்தியா போன்ற கடன் வழங்கும் நாடுகளும் தலையிட வேண்டும் என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான செயல்முறைகள் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் எல்லை “வானம்” என்று.இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்குவதற்கு தனது நிறைவேற்று சபையின் அங்கீகாரத்திற்கான காலத்தை குறிப்பிட முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ள பின்னணியில் ஜப்பான் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
கடனாளிகளுடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்தே பெரும்பாலானவை தங்கியிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணம் தாமதம் ஆவதில் சிக்கல் ஏற்படாது என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.