கடந்த மே மாதம் 9ஆம் திகதி செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (5ஆம் திகதி) நீதிமன்றில் அறிவித்தது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கோத்தகோகம மற்றும் மைனகோகம செயற்பாட்டாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவடைந்தது இது தொடர்பான விசாரணைக் கோப்பு கையளிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட 36 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.
இந்தத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடம் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. மேலதிக நடவடிக்கைக்காக சட்டமா அதிபரிடம் விசாரணை கோப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.