நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுக்கள் எதிர்பார்த்த பலனைப் பெறவில்லை எனவும், அதன் காரணமாகவே புதிய மீளாய்வு குழு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் அவசர கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், நீண்டகாலமாக சிறையில் வாடும் கைதிகள், நோய்வாய்ப்பட்ட கைதிகள், வயதான கைதிகள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தற்போதுள்ள விதிகள் திருத்தப்படும் எனவும், இதற்கான சட்டமூலங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததுடன், நீதி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சிறைச்சாலைக்கு வருகை தருவதாக எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்பதும் இந்த கண்காணிப்பு பயணத்தின் விசேட அம்சமாகும்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்கள் உட்பட கைதிகளை அமைச்சர் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன் சிறைச்சாலையின் சமையலறை மற்றும் தொழிற்சாலை வளாகத்தின் செயற்பாடுகள் குறித்தும் விசேட அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிறைச்சாலையின் செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கும், குறிப்பாக சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களை தற்போதைய காலத்தை விட தூய்மையாக வைப்பதற்கும் சிறைச்சாலை அதிகாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.