ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் நிறைய இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்படும் பொதிகளை பரிசோதிக்கும் பொறுப்பில் உள்ள சுங்கத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று போதை மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்தார். குறித்த பார்சல் ஜேர்மனியில் இருந்து அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் பெயரில் தனிப்பட்ட பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பார்சல் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் சிறப்பு சோதனைக்கு உட்படுத்தினர். அந்த பார்சலில் 4,956 மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் கவனமாக அடைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த போதை மாத்திரைகளின் எடை 2 கிலோ 387 கிராம் எனவும் தெரிய வந்துள்ளது/
சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா மேலும் தெரிவித்தார்.