உத்தேச வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியை விரைவுபடுத்தும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் அவர்கள் 03.11.2022 அன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் முன்னணி தொழில்முனைவோர் குழுவைச் சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டுக்கான முன்மொழிவுகளை விரைவாக அங்கீகரிப்பதற்கு தேவையான திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கனேடிய தொழில்முனைவோர் குழுவிடம் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெரிவித்த பிரதமர், வெளிநாடுகளில் உள்ள வர்த்தக சமூகத்தை இலங்கையில் அதிக முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப கனடாவின் முன்னணி வர்த்தகர்களின் ஆதரவு தேவை என்றும், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், மீன்பிடி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடுகளுக்கு அதிக தேவை இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
தற்போதைய நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக தூதுக்குழுவினர் பிரதமரிடம் உறுதியளித்தனர். கனேடிய வர்த்தக சமூகம், இலங்கையுடன் தற்போதுள்ள உறவுகளை அதிகரிக்க நம்புவதாக கூறியதுடன், இலங்கையிலுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களின் தொழில்களை கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை அங்கீகரிப்பதில் உள்ள தேவையற்ற தாமதங்களை அகற்றுமாறு அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர். மேலும் பல ஆசிய நாடுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற தங்கள் வெளிநாட்டு முதலீட்டு செயல்முறைகளை விரைவுபடுத்தியுள்ளன தெரிவித்தனர்.