உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 18ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையிலும் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடம் இருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்ததாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
உயர்தரப் பெறுபேறுகள் வெளியான பின்னர் மீண்டும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அதற்குத் தயாராகுவதற்கு மூன்று மாதங்களும் ஒரு வாரமும் என்ற குறுகிய கால அவகாசம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நிலைமை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் மற்றும் ஒன்பது மாகாணங்களின் பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பான கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பொருத்தமான ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.
இந்த அனைத்து உண்மைகளையும் கருத்திற் கொண்டு தற்போது நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு தரப்பிலிருந்தும் நீடிப்புக்கான கோரிக்கை வரவில்லை எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.