ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட முகாமைத்துவப் பாதைக்கு முன்னுரிமை அளிப்பது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விசேட அம்சமாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (16) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசாங்கம் ஒன்றிணைந்த அரசாங்கம் எனவும், பொதுஜன பெரமுன, ஐ.தே.க., ம.இ.மு., ஸ்ரீலங்கா கட்சி, ஈ.பி.டி.பி., போன்ற பல கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டை மீட்பதற்காக கூட்டு அரசாங்கத்தை அமைக்க முன்வந்துள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு கலாநிதி ஹர்ஷத சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த பிரதமர், இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இடைக்கால பொதுத் தேர்தலை நடத்த முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். .
அமெரிக்க செனட் சபையின் பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கினரை இடைக்காலத் தேர்தல் மூலம் நியமிக்க முடியும் என்றாலும், இலங்கை அரசியலமைப்பில் அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் தருணம், நாடு பாரிய நெருக்கடியான காலப்பகுதிக்குள் இருப்பதை மறந்துவிடக் கூடாது எனவும் .சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளை உள்ளடக்கியதன் மூலம் வரலாற்றில் மிக முக்கியமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் பாதையில் ஜனாதிபதி பிரவேசித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.