முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி பொது மன்னிப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு மனுதாரர் தரப்பு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிட எதிர்பார்த்துள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்வரும் 24ஆம் திகதி அழைத்து உண்மைகளை உறுதிப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.