உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்க இன்னும் 48 மணி நேரம் உள்ள நிலையில், இந்த ஆண்டு போட்டியை நடத்தும் கத்தாரின் ஆளும் அரச குடும்பம், போட்டி நடைபெறும் மைதானங்களில் மதுபானம் விற்பதைத் தடை செய்யுமாறு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கோரிக்கையால் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி ஏற்பாட்டாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போட்டி நடைபெறும் மைதானங்களில் பார்வையாளர்களுக்கு பீர் விற்பனை செய்ய முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கட்டார் அரச குடும்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க அனுமதிக்கப்பட மாட்டாது என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதற்கான சிறப்பு அனுமதியுடன் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மட்டுமே போட்டியின் பார்வையாளர்களுக்கு மது அல்லது பீர் வாங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய மதச் சட்டங்கள் பின்பற்றப்படும் கத்தாரில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மது விற்பனை அனுமதிக்கப்படுகின்றது, மேலும் மது வாங்கும் முஸ்லீம் அல்லாத நாட்டவர்கள் அதற்கான சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும் எனவும்.
எவ்வாறாயினும், மைதானங்களில் மது விற்பனை செய்வது தொடர்பாக கத்தார் அதிகாரிகள் அடுத்த சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.