முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்த பிரேரணை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே குறித்த பயணத் தடையினை தற்காலிகமாக நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சார்பில் ஆஜரான சட்டத்தரணி இனோகா பெரேரா, தமது கட்சிக்காரர் புனித யாத்திரைக்காக இந்தியா செல்ல விரும்புவதாகவும், தற்போதைய பயணத்தடையை இம்மாதம் 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறும் நீதிமன்றில் கோரினார்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த காலத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்,கடந்த அரசாங்கத்தின் போது அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரையன் ஷாடிக்கின் நிறுவனப் பங்குகளை போலியான சட்ட மூலத்தை தயாரித்து விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாவை அபகரித்ததாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்க விடையமாகும்.