அவர் ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
மேலும்,குற்றப்பத்திரிகையை கையளித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூன்று பிரதிவாதிகள் வழக்கு முடியும் வரை வெளிநாடு செல்ல தடை விதித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்தார்.
அதன் பின்னர், பிரதிவாதிகள் ஒவ்வொருவரையும் தலா 20,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறும், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் வெளிநாட்டுக்கு கடமைக்காக செல்ல விரும்பினால், நீதிமன்றத்தை நாடினால் அதனை பரிசீலிக்க தயார் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும். வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டார்.