
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரான அஜித் நிவார்ட் கப்ரால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜராகிய போது குறித்த தனிப்பட்ட முறைப்பாடு கோரப்பட்டது.
அப்போது, அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கை தொடர முடியாது என முதற்கட்ட ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துமூல உரைகளை டிசம்பர் 15ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் .ஹர்ஷன கெகுனாவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.
மேலும், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த தனிப்பட்ட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.