ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறாமல் மானிய விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ய இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச சந்தையில் இருந்து ரஷ்யா கச்சா எண்ணெயை எந்த நாடும் அகற்ற விரும்பவில்லை என்றும் எனவே ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ அல்லது இந்தியா ஊடாகவோ ரஷ்யாவினுடைய கச்சா எண்ணெயை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உக்ரேனில் இடம்பெற்ற யுத்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்ள முடிந்தால், இலங்கை அதற்காக பாடுபடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதுள்ள எண்ணெய் விலையை இலங்கையால் தாங்க முடியாது என்பதால் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்ள முடிந்தால், சர்வதேச சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை மீறாமல் இருந்தால் கண்டிப்பாக அதற்கு இலங்கை பாடுபடும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.