இன்னும் 4 நாட்களுக்கு வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயு கப்பல் நாட்டிற்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கான குறுகிய கால தீர்வாக விநியோகத்தை மட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எவ்வாறாயினும், குறித்த எரிவாயு கப்பல் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், எரிவாயு இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு எரிவாயு கப்பல் வரும் புதன்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாகவும், எரிவாயு இருப்புக்களை இறக்கிய பின்னர் வழமை போன்று எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது தினசரி வெளியிடப்படும் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் அளவு சுமார் 42,000 ஆகும். எதிர்வரும் வியாழக்கிழமைக்குப் பின்னர் தினமும் 72,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.