சீனாவின் கோவிட் எதிர்ப்பு கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல நகரங்களில் மூன்றாவது நாளாக தொடர்கின்றன.
தலைநகர் பெய்ஜிங் மற்றும் சீனாவின் நிதி மையமான ஷாங்காய் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த போராட்டங்கள் நடந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். சீனாவின் கடுமையான “ஜீரோ கோவிட்” கொள்கை தோல்வியடைந்ததாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கோவிட் எதிர்ப்பு விதிமுறைகளை நீக்கக் கோரி தொடங்கிய போராட்டங்கள் தற்போது அரசுக்கு எதிரான போராட்டமாக வளர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஷாங்காய் நகரில் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான கோவிட் விதிமுறைகளுக்கு மத்தியில் குறித்த அடுக்குமாடி குடியிருப்பு பூட்டப்பட்டிருந்ததால் தீ விபத்து ஏற்பட்ட போது தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அத்தோடு, கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.