குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்கு தேவையான அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
மனுதாரர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீட்டின் பாதுகாப்புக்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மனுதாரர் ஷானி அபேசேகர தனது வசிப்பிடத்தை மாற்ற விரும்பினால், அதற்கு வேறு இடத்தை வழங்கத் தயாராக இருப்பதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
ஷானி அபேசேகரவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இந்த அறிவித்தலில் தமது கட்சிக்காரர் திருப்தியடைந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பின் கீழ் பிரதிவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும். இதுதொடர்பான மனுவை டிசம்பர் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.