காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான இலங்கையின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், எதிர்காலத்தில் தேவையான தொழில்நுட்ப மற்றும் கோட்பாட்டு ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் தெரிவித்துள்ளார்.
மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன மற்றும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடையங்கள் பேசப்பட்டுள்ளன.
அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாகவும் லிசா வான்ஸ்டால் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இலங்கையின் வேலைத்திட்டத்தை பாராட்டிய பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர், இது நாட்டின் எதிர்காலத்திற்கான நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனைத்தொடர்ந்து, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் ருவன் விஜயவர்தன கருத்துக்களை முன்வைத்ததுடன், காலநிலை மாற்ற சட்டம் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகம் ஒன்றை நிறுவவுள்ளதாக தெரிவித்த ருவன் விஜயவர்தன, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்திற்கு முகங்கொடுக்க தேவையான தீர்வுகளை இங்கு காணலாம் எனவும் ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் ஏற்கனவே பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேலும் மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.