நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் இன்றல்ல அடுத்த 25 வருடங்களுக்குத் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இளைஞர்களின் அதிகபட்ச பங்களிப்பைப் பெறுவதே தனது எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு 75வது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் மேடையில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்பு தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு,”தேசிய இளைஞர் மேடை” நாட்டின் எதிர்காலம் குறித்த தமது பார்வையை அரசாங்கத்திற்கு முன்வைப்பதற்கு இளைஞர்களுக்கு கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, அந்த மாவட்டங்களில் சுற்றுலாத் தலங்களைக் கொண்ட இடங்களைக் கண்டறிந்து, அவற்றை சுற்றுலா வலயங்களாக மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர்கள் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அடுத்த வருடம் புதிய சுற்றுலாக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்படும்எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கையின் பல்கலைக்கழக முறையை புதிய பாதைக்கு வழிநடத்தும் வகையில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் உபவேந்தர்களுக்கு அறிவித்ததுடன், பகிடிவதைகளை தடுப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.