முட்டைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) வழங்கிய உத்தரவின் பிரகாரம், முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை இன்று (15) நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
எனினும், திருத்தியமைக்கப்பட்ட விலையில் முட்டைகளை விற்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தையில் முட்டை விலை வேகமாக உயர்ந்து வருவதை தடுக்கும் வகையில், முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து கடந்த ஆகஸ்ட் 19-ம் திகதி வர்த்தமானி அறிவிப்பை அரசு வெளியிட்டது.
எனினும், முட்டை உற்பத்தியாளர்கள் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 50 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்ய கடை உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் முட்டை உற்பத்தியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் முட்டை விலையை உயர்த்த வேண்டும் என்றும், சந்தை தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து முட்டை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதன்படி, தற்போது வெளியிடப்பட்டுள்ள முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்த உத்தரவிடக்கோரி முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.