காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் கவனத்தினை செலுத்தியுள்ளது.
இதன்படி, 70 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைவதற்கும், 2050 ஆம் ஆண்டளவில் கரியமில நடுநிலையை அடைவதற்கும், கரியமில வாயு வெளியேற்ற அனுமதிக்கான சர்வதேச சந்தையை கண்டறிவதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
அத்தோடு, எதிர்கால எரிசக்தி ஆதாரங்களான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் போன்ற சலுகை காலநிலை நிதியுதவியின் கார்பன் வரவுகள் பற்றிய தனது சர்வதேச அறிவை கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதிகாரிகளுடன் எரிக் சொல்ஹெய்ம் பகிர்ந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அங்கு உரையாற்றிய ருவான் விஜேவர்தன, வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து பெருமளவிலான முதலீட்டாளர்கள் உள்ளதாகவும்தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான மாநாடு நடைபெறவுள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.