உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பழைய முறையிலோ அல்லது தற்போதைய முறையிலோ அல்லது எந்த முறைமையிலோ எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுஜன பெரமுன தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டதாகவும், வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (21) நடைபெற்ற கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் 13 தொகுதிகளிலும் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளையில் சுமார் 20 பில்லியன் ரூபா செலவில் தேர்தலை நடாத்தவுள்ளதாகவும் இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.