நிதி நிறுவனங்களுக்கு செலுத்தப்படாத குத்தகைத் தவணைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேலும், இது சம்பந்தமாக, ஜனவரி 31, 2021 அன்று வெளியிடப்பட்ட RTM 557 அறிவுறுத்தல் தாளில், நிதி நிறுவனங்களால் வாகனங்களை திரும்பப் பெறும் செயல்பாட்டில் பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடுகின்றது.
எவ்வாறாயினும், அறிவுறுத்தல் தாள் மூலம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும், சில பொலிஸ் அதிகாரிகள் அந்த சட்ட விதிகளுக்கு சாதகமாக செயற்படுவதால் மீண்டும் அவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, குத்தகைதாரரோ அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியோ முன்னறிவிப்பு அளித்து, பொலிஸ் பாதுகாப்பைக் கோரும் போது, அமைதியைக் காக்கும் நோக்கத்திற்காக போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ஆனால் அதற்க்கு மாற்றமாக வாகனங்கள் அல்லது உபகரணங்களை வாங்கும் நோக்கத்தில் பொலிஸ் அதிகாரிகளின் தலையீடு இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தல் தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாகனம் வாங்குபவரிடமிருந்து எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் வாகனம் அல்லது உபகரணங்களை மீட்டெடுக்க முடியும் என்று அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வாகனத்தை பெற்றுக் கொண்ட நபர், வாகனத்தை திரும்பப் பெற முயற்சிக்கும் போது ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், அந்த அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவுறுத்தல் தாளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.