பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டைகள், பாஸ்போர்ட்டுகளை தயாரித்து வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஆட்பதிவு திணைக்களத்தின் கணனி முறையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்கள் தமது உண்மைத் தகவல்களை மாற்றி போலியான பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளைத் தயாரித்து பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, சந்தேகத்திற்கிடமான அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளை உடனடியாகச் சரிபார்க்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஆட்பதிவு திணைக்களத்திற்கும் இடையில் கணனி முறையை பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆகவே, ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணனி முறையைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றதன் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சந்தேகத்திற்கிடமான நபர்களின் தகவல்களை உடனடியாகச் சரிபார்க்கவும் அவ்வாறு போலியான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கான தண்டனையினை பெற்றுக் கொடுக்கவும் முடியும் என தெரிவித்துள்ளது.