டீசல் விலையை குறைப்பதை விட பஸ் கட்டணத்தை குறைக்க தனியார் பஸ் சங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும், டீசல் விலை சிறிதளவு குறைக்கப்பட்டாலும், பேருந்து தொழிலில் உதிரி பாகங்கள் உள்ளிட்ட இதர செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடி 02 நாட்களுக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தாம் உடன்படவில்லை என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று நள்ளிரவு முதல் ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், அதன்படி ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இதன்படி கடந்த காலத்தில் டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டண திருத்தத்திற்கான கணக்கீடுகள் இன்று மேற்கொள்ளப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தமது நிறுவனத்தின் பரிந்துரைகள் இன்று போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
அதன்படி, எரிபொருள் விலை திருத்தத்துடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணம் குறைக்கப்படுமா? என்பது நாளை அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.