உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றம் தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவ கேர்னல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேலும், பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மற்றும் அதன் உறுப்பினர்கள், பிரதமர், நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதாக மனுதாரர் கூறியுள்ளார்.
அதற்கமைய, 10 பில்லியன் ரூபாவை உரிய தேர்தலை நடத்துவதற்கு செலவிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு தெரிவித்ததாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த வேளையில் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல என சமூகத்தில் கருத்து நிலவுவதாகவும் சர்வதேச நாணய நிதியமும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள மனுதாரர், அந்தத் தேர்தலை நடத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.