பண்டாரவத்தை சந்திக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 7 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 17 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞனும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களுடன் ஒன்றரை கிலோ கஞ்சா, 8 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 380 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலங்கம, பண்டாரவத்தை சந்தியில் போதைப்பொருளுடன் இருவர் வந்துள்ளதாக தலங்கம பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, லஞ்ச ஒழிப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, 17 வயதுடைய இளைஞன் 200 மில்லிகிராம் ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாகவும், மற்றைய சந்தேகநபர் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் புனர்வாழ்வு முகாமில் இருந்து வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மற்றைய சந்தேக நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சந்தேகநபர்களுக்கு போதைப்பொருளை வழங்கியது யார் என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
மேலும், 17 வயதுடைய சந்தேக நபர் அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய சந்தேக நபர் 51 வயதான பத்தரமுல்ல துட்டுகெமுனு மாவத்தையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.