இரசாயன மற்றும் கரிம உர விநியோகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ரசாயன உரங்கள் மற்றும் அங்கக உரங்களை வழங்காமல் 50 விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரிகளில் பெருமளவிலான அதிகாரிகள் கடந்த ஆண்டு பருவத்தில் பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளுக்கு எரிபொருள் உரிமம் வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் நெல் சாகுபடி கூட செய்யாத விவசாயிகளுக்கு உரிமம் வழங்கி பணம் பெறுவதுடன், போலி உரிமம் வழங்கி எரிபொருளை விற்பனை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் சுமார் 300 விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.