கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடியும் வரை தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க முடியாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், மின்சார சபை தற்போது எதிர்நோக்கி வரும் கடும் நிதி நெருக்கடியை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை தாங்கும் முறையின்றி தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது சிக்கலாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், உத்தேச மின்சார கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றிலிருந்து எவ்வித பிரச்சினையும் இன்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் நேற்றைய கலந்துரையாடலில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளன.
இருந்தபோதிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச மின்சார விலைத் திருத்தத்தில் செலவினத்தை மீளப்பெறுவதற்குத் தேவையான நிபந்தனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, உரிய தொகையை 60 நாட்களுக்குள் வழங்க அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், 60 நாட்களில் பணம் செலுத்தியதன் அடிப்படையில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கான செலவை தற்போது மின்சார சபையால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்படி,தொடர்ந்தும் மின்சாரம் வழங்குவது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.