தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து இலங்கையை கடப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதன் காரணமாக பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.