பொலிஸாரால் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட பெலவத்தை கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் இன்னும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன்படி, அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் கார் ஒன்று நீர்கொழும்பில் உள்ள வீடொன்றின் கேரேஜில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் தம்பதியினர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், குறித்த மரணம் கடந்த 30ஆம் திகதி இரவு இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படும் தம்பதியினர் கடந்த 31ஆம் திகதி வெளிநாடு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, குறித்த தொழிலதிபரின் பணப்பையில் இருந்த 4 கிரெடிட் கார்டுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதோடு அவற்றைப் பயன்படுத்தி 5 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தகரின் கடன் அட்டையை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், பத்தரமுல்லை பெலவத்த பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் மிதந்த நிலையில் நேற்று இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இவர் கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சடலம் கண்டெடுக்கப்பட்ட நீச்சல் குளத்திற்கு அருகில் பல இரத்தக் கறைகளும் காணப்பட்டதுடன், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிப்பதோடு தொழிலதிபரின் தலையில் அடிபட்டு சடலத்தை நீச்சல் குளத்தில் வீசி கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்தோடு, வர்த்தகரின் படுகொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.