மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ அதிகாரி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், அனுராதபுரம் விகாரமதேவாச்சிய பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான இலங்கை இராணுவ சேவைப் பிரிவின் லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல்.தேசப்பிரிய மாலியில் உள்ள பனாகோ நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பிப்ரவரி 11ஆம் திகதி பிற்பகல் 01.56 மணியளவில் காலமானார்.
இதன்படி, இலங்கை இராணுவத்தில் 14 வருட சேவையை நிறைவு செய்துள்ள குறித்த லான்ஸ் கோப்ரல், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி மாலியிலிருந்து தனது கடமைகளை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பவிருந்தார்.
அத்தோடு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மரபுகளுக்கு அமைவாக, மாலி அரசின் இராணுவ நடவடிக்கைத் தலைவர் டானியேலா க்ரோஸ்லக் தலைமையில், பெப்ரவரி 16ஆம் திகதி காலை 09.00 மணியளவில் தலைமையகத்தில் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், உயிரிழந்த லான்ஸ் கோப்ரல் தேசப்பிரியவின் பூதவுடல் இன்று மாலை 06.00 மணியளவில் துருக்கி எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரியைகள் இலங்கை இராணுவத்தினரின் மரியாதைக்கு மத்தியில் அனுராதபுரம் விஹாரமேதவாச்சியில் நடைபெறும்.