கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல உதவிய பிக்குகள் இருவரையும், மற்றுமொருவரையும் நீர்கொழும்பு பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேலும், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிட்டதெனிய சந்தியில் சந்தேக நபரை வேண்டுமென்றே சதி செய்து தப்பிச் செல்ல உதவிய பிக்கு ஒருவரும் கார் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பிக்கு ரிட்டதெனிய தம்ம ரிசார்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட பிக்குகள் 38 மற்றும் 41 வயதுடைய ரிட்டதெனிய தம்ம நிகேதனவில் வசிப்பவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதோடு சந்தேகநபரான சாரதி 27 வயதுடைய பிஹிம்பிய, இரத்மலே பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி சந்தேகநபர் ஒருவர் இரகசியமாக வெளிநாடு செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த நபர் ரவிந்து வர்ண ரங்கா என்ற போலிப் பெயரில் வெளிநாடு செல்ல மூற்ப்பட்டுள்ளதோடு 13 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாரிய குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் குறித்த சந்தேக நபரை கைவிலங்கிடவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.