
கனிம எண்ணெய் விநியோகத்தை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமது அமைப்பு தயாராக இருப்பதாக சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது அமைப்பு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த பிரதிநிதிகள், ஹம்பாந்தோட்டையில் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய முதன்மை எரிசக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான முழுமையான முதலீட்டை மேற்கொள்ள தமது அமைப்பு தயாராகவுள்ளதாக ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
அத்தோடு, எதிர்காலத்தில் இலங்கையின் அபிலாஷைகளின் அடிப்படையில் உரிய அழைப்புகளுக்கு தங்களை முன்வைக்க தமது நிறுவனம் தயாராக இருப்பதாக பிரதிநிதிகள் குழு மேலும் தெரிவித்துள்ளதுடன் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்களை முன்வைத்த சினோபெக்கின் பிரதிநிதிகள், அதற்கான முன்மொழிவையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தின் பின்னர் விரைவான அபிவிருத்தியை இலங்கை எதிர்பார்ப்பதாக மேலும் குறிப்பிட்டதோடு .எதிர்காலத்தில் நாட்டில் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகங்களை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.