அமெரிக்காவின் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாநிலங்கள் வலுவான சூறாவளி மற்றும் புயல் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த மாநிலங்களில் இருந்து 26 இறப்புகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, இந்த அனர்த்தத்தை கருத்தில் கொண்டு மிசிசிப்பி மாகாணத்தில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அனர்த்தத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, காணாமல் போனவர்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மிசிசிப்பி சூறாவளி மற்றும் புயல் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மிசிசிப்பி, அலபாமா மற்றும் டென்னசி மாகாணங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததன் காரணமாக சுமார் 32,000 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு மின்சார விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்காவின் பல தென் மாநிலங்களில் இன்று புயல் நிலைகளை எதிர்பார்க்கலாம் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளதுடன் சுமார் 20 மில்லியன் மக்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.