நீண்ட விடுமுறை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காரணமாக எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது இயங்கும் வழமையான நீண்ட தூர புகையிரதங்களுக்கு மேலதிகமாக இந்த விசேட புகையிரதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் இந்திக்க இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் 16ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06:30 மற்றும் இரவு 07:30 மணிக்கு பதுளைக்கு இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடும் எனவும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை தினமும் காலை 07.00 மணிக்கும் மாலை 05.20 மணிக்கும் இரண்டு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இரவு 07.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரை புகையிரதம் ஒன்று இயக்கப்படவுள்ளதோடு எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 06.10 மணிக்கு காலியில் இருந்து கொழும்பு நோக்கி விசேட புகையிரதமொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை காலை 06 மற்றும் 05 மணிக்கு மருதானையிலிருந்து பெலியத்த வரை விசேட புகையிரதமொன்று சேவையில் ஈடுபடவுள்ளதோடு அனுராதபுரத்திலிருந்து பெலியத்த வரை 9 மற்றும் 16 ஆம் திகதிகளில் நண்பகல் 12:30 மணிக்கு புகையிரதம் ஒன்று இயக்கப்படவுள்ளது.
இதன்படி, நாளை பிற்பகல் 03.30 மணிக்கு பெலியத்தையிலிருந்து மருதானை வரை விசேட புகையிரதமொன்று சேவையில் ஈடுபடவுள்ளதோடு எதிர்வரும் 08 மற்றும் 15 ஆம் திகதிகளில் காலை 07.30 மணிக்கு பெலியத்தவிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட புகையிரதமொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் இந்திக்க இண்டிபோலகே மேலும் தெரிவித்துள்ளார்.