பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான விவாதத்தை ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நமது நாட்டுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டதில் பொது நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு அறிவிக்கும் சந்திப்பில் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கை நடவடிக்கைகளை உள்ளடக்கிய வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டது என்றும் 2025 ஆம் ஆண்டில், இலக்கு வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 14 சதவீதமாக உள்ளதாகவும் இது கடினமான இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புதிய பொது நிதி மேலாண்மைச் சட்டத்தை இயற்றுவது மற்றும் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது மற்றும் ஊழல் அபாயங்களைக் குறைப்பது ஆகியவையும் செய்யப்பட வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு உபரியை மீளக் கட்டியெழுப்புவதை உள்ளடக்கிய அடிப்படை பொது நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.