இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு இன்று முக்கியமான நாள்.
இதன்படி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் தொடர்பான உத்தியோகபூர்வ முடிவை இன்று அறிவிக்கவுள்ளமையே இதற்குக் காரணம்.
அத்தோடு, அமெரிக்காவின் வாஷிங்டனில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், முன்னதாக, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆதரவளிக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வ தீர்மானம் வழங்கப்பட்ட பின்னரே இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் திட்டத்தின் முதல் தவணையை கூட விடுவிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஜப்பான், இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதுடன் சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட வெளிநாட்டு கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாதம் எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்தார்.
இதன்படி, கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு அதிகாரப்பூர்வ குழுவை நியமிப்பதா அல்லது இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இறுதி உடன்பாட்டை எட்டுவதா என்பது குறித்த இறுதி முடிவை அந்தந்த நாடுகள் அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இக்கட்டான இந்த நேரத்தில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா நேற்று தெரிவித்தார்.