யாழ்ப்பாணம், மாமுனை, சுண்டிக்குளம் ஆகிய கடற்பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் நீரில் மூழ்கி மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் மாமுனை கடற்படை பிரிவின் சிறிய கப்பல்களை களமிறக்கி மாமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இக் கைது இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, சந்தேகநபர்களுக்கு சொந்தமான மூன்று டாங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் கடற்பரப்பு மற்றும் கரையோரங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.