இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜூலியானா மன்னெல்லாவுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடினார்.
இதன்படி, இத்தாலியத் தூதுவர் ரீட்டா ஜூலியானா மன்னெல்லா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டென்னிஸ் சிபி ஆகியோர் நேற்று (24) பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்ததுடன், புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இத்தாலிய மொழித் துறைகளை நிறுவுவதற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதோடு, இத்தாலிய மொழி நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடி வருவதாகத் தூதுவர் மன்னெல்லா தெரிவித்தார்.
மேலும்,இளைஞர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மையத்தையும் இத்தாலி அமைக்க உள்ளதாகவும் குறித்த பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு இத்தாலியில் உள்ள ஹோட்டல்களில் தேவை இருப்பதாகவும், பயிற்சி பெற்ற இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் இவ்வாறான பயிற்சிகள் உதவும் என இத்தாலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டென்னிஸ் சிபி, இந்நாட்டில் சுற்றுலாத்துறை வேகமாக மீண்டு வருவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு பல ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் உயர் கலாசார மதிப்புமிக்க இடங்களுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுவதால் கலாசார சுற்றுலாத்துறையில் வளர்ச்சி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இத்தாலி மற்றும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பங்களிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தூதுவர் மன்னெல்லா, இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியதற்காக இத்தாலிய அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
மேலும், எக்ஸ்போ 2030க்கு ஏலம் எடுக்க இத்தாலி திட்டமிட்டுள்ளதாக இத்தாலிய தூதுவர் பிரதமரிடம் தெரிவித்துள்ளதோடு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.