இலங்கை அதிபர் சேவையின் நீண்டகால சேவைப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து உத்தியோகபூர்வமாக ஆராய்ந்து உடனடித் தீர்வுகளை அறிவிப்பதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் ஐந்து நிபுணர்களைக் கொண்ட குழு ஏற்கனவே தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அனைத்து தலைமையாசிரியர் சங்கங்களையும் ஒன்றிணைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள மே 9 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மே 15 முதல் தொழிற்சங்க அமைப்புகளுடன் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கல்வித்துறை நிபுணர்களிடம் விசாரித்து, மாகாண வலய அலுவலகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளுக்கு சென்று தற்போதைய நிலவரத்தை அறிய உள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
மேலும், உத்தேச கல்வி சீர்திருத்தங்களை பிரயோகித்து அதிபரின் சேவையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழியுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இந்தக் குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.