வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாரி மலையில் புதிய சிவன் சிலை நிறுவுதல் மற்றும் சிவன் கோவிலின் பிரச்சினைகள் குறித்து அவதானிக்கும் நோக்கில் சட்டத்தரணிகள் குழுவொன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் குழுவும் இந்த கண்காணிப்பு பயணத்தில் இணைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, வெடுக்குநாரி மலையில் முன்னர் நிறுவப்பட்ட சிவன் சிலை மற்றும் பிற சிலைகள் கடந்த காலங்களில் மர்ம குழுவினரால் அகற்றப்பட்டன.
பின்னர், அப்பகுதி மக்களும், கோவில் நிர்வாக சபையினரும் புதிய சிலையை நிறுவச் சென்றபோது, சம்பந்தப்பட்ட இடம் தொல்லியல் துறை என்பதால், தொல்லியல் துறை மற்றும் பிற நிறுவனங்கள் புதிய கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கவில்லை இது தொடர்பில் பிரதேசவாசிகள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், பழைய சிலை இருந்த இடத்தில் புதிய சிலையை வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த விசாரணையில், கோவில் நிர்வாக சபை குழு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு வவுனியா நீதிமன்றில் ஆஜராகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.