இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் சஜீவ துய்யகொண்டா, தன்னை கறுப்புப் பட்டியலில் சேர்த்த விமானப்படைத் தளபதியின் முடிவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி, விமானப்படைத் தளபதி, இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், 1988 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி இலங்கை விமானப்படையில் விமானியாக இணைந்து கொண்டதாகவும் வடகிழக்கு போர் உட்பட பல நடவடிக்கைகளில் பங்குபற்றியதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளதுடன் அதற்காக வீரவிக்ரம விபூஷன், ரணஷப்யா போன்ற பல பதக்கங்களை பெற்றுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, மார்ச் 10 ஆம் திகதி சமூக ஊடகங்களில் ஒரு கடிதம் வெளியிடப்பட்டதாகவும், இலங்கை விமானப்படையால் தாம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளதுடன் அத்தகைய கறுப்புப் பட்டியல் தொடர்பில் இலங்கை விமானப்படை இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை எனவும், தாம் எந்தவொரு சட்டவிரோதச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும், கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் முடிவை எடுப்பதற்கு முன்னர் இலங்கை விமானப்படை தன்னிடம் எந்தவிதமான விசாரணைகளையும் நடத்தவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். .
எனவே, நிலையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஓய்வு பெற்ற அதிகாரியை கறுப்புப் பட்டியலில் சேர்க்க விமானப்படைத் தளபதி அல்லது அவரது பிரதிநிதி அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய மக்கள் படையின் அரசியல் மேடையில் கருத்து தெரிவித்ததன் காரணமாகவே இந்த கறுப்புப் பட்டியல் இடம்பெற்றதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், தாம் ஒரு போதும் கெளரவத்தை மீறவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த சட்டத்தின் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், தம்மை கறுப்புப் பட்டியலில் சேர்த்த இலங்கை விமானப்படையின் முடிவை ரத்து செய்து உத்தரவிடுமாறும் மனுதாரர் தனது மனுவில் கோரியுள்ளார்.
மேலும், தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக 5 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க உத்தரவிடுமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.