சுமார் பத்து பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உதவி வகுப்பு ஆசிரியரை களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் கைது செய்துள்ளது.
இதன்படி, களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கு தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் வேறு இடங்களில் சிறு குழுக்களாக வகுப்புகளை நடத்தி அங்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, சந்தேகநபரின் பதிவு செய்யப்பட்ட காட்சிகளின் அடிப்படையில் 16 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தெரியவந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளை அவதானித்து அவர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகத்திற்குரிய ஆசிரியருக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாக அவரது சட்டப்பூர்வ மனைவி களுத்துறை வடக்கு பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த சந்தேகநபரின் மடிக்கணினியை சோதித்தபோது சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் கிடைத்துள்ளது.
இதன்படி, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், சிறுமிகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, காரில் அழைத்துச் சென்ற சந்தேக நபர், வெறிச்சோடிய பகுதிகளில் காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும், சிறுமிகளுக்கு ஜூம் இணைப்புகளை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.