
அமைச்சரவையின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இதன்படி, உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டம் அமைச்சரவையின் விசேட கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழு கூட்டம் அங்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
உள்ளுர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகளுக்கு பாராளுமன்ற அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவது குறித்து இந்த கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.