
நூருல் ஹுதா உமர்
மன்னம்பிட்டி பஸ் விபத்தில் இதுவரையான தகவல்களின் படி 11 பேர் மரணித்து, 40 பேரளவில் காயமடைந்துள்ளனர் என அறியக் கூடியதாக உள்ளது. இது போன்ற கோர விபத்துக்கள் இனிமேலும் இடம்பெறாமல் போக்குவரத்து அமைச்சும், மாகாண வீதிப் பயணிகள் அதிகார சபையும், பொலிஸ் திணைக்களமும் இதற்கான சில வேலை திட்டங்களை முறையாக செய்ய வேண்டுமென அடிப்படை மனித உரிமை மீறல் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம் ஏ நளீர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும், உண்மையில் இந்த துயர் நிறைந்த சம்பவம் என்னையும் மிக வேதனைக்குட்படுத்தி உள்ளது. மன்னம்பிட்டி பஸ் விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலன்பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான கவனயீனமான விபத்துக்கள் சாதாரண மக்களின் உயிருடன் விளையாடுவதாக அமைந்துள்ளது. இந்த பொடுபோக்கான செயலுக்கு பொறுப்பேற்கவேண்டியது யார்? விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பொடுபோக்கான செயலுக்கு துணைபோன அதிகாரிகள் கூறப்போகும் நியாயம் என்ன? குறித்த பேருந்து தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனம் இருந்த சூழ்நிலையில் அதனை கவனத்தில் கொள்ளாமல் விட்டது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.