
காலநிலை மாற்றத்தை கையாள்வதற்காக இலங்கை எடுத்து வரும் மூலோபாய வேலைத்திட்டத்தை வழிநடத்த தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய ஆலோசனைக் குழுவொன்றை அமைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இக்குழுவானது 06 மாதங்களுக்கு ஒரு தடவையாவது கூடி வேலையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாகவும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இலங்கையின் முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, துறைசார் நிபுணர்கள் மற்றும் வல்லுனர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலில், எதிர்வரும் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் நாடு என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மூலோபாயத் திட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. .
மேலும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உள்ளுர் மற்றும் பூகோள சவால்களுக்கு முகங்கொடுக்க வலுவான வேலைத்திட்டம் தேவை என தெரிவித்த ஜனாதிபதி, உலகளாவிய ரீதியில் சவாலை வெற்றிகொள்வதற்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
அனைத்து செயற்பாடுகளிலும் மிக முக்கியமான காரணியாக நிதித்துறை செயற்படுவதுடன், காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள உத்தேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் சர்வதேச ஆய்வு மையமாக பேணப்பட வேண்டுமெனவும், அது காலநிலை மாற்றத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.